தமிழ்நாடு முழுவதும் இன்றைய தினம் குரூப்பு 2 மற்றும் 2 ஏ தேர்வுக்கான முதன்மை தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 186 இடங்களில் இருக்கக்கூடிய 280 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்ற வருகிறது. மொத்தம் உள்ள 5,446 பதவிகளுக்கு சுமார் 55 ஆயிரம் பேர் என்று தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் பொறுத்தவரை சுமார் 8,315 பேர் இந்த தேர்வு எழுதுகின்றனர். இதற்காக சென்னையில் மட்டும் 38 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மாலை என இரு வேளைகளில் தேர்வு நடைபெறுகிறது. காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் பொதுத் தேர்வும் நடத்தப்படுகிறது. இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி குரூப்- 2, குரூப்- 2ஏ முதன்மைத் தேர்வின் காலை அமர்வில் மாநிலம் முழுவதும் பல இடங்களில் குளறுபடி ஏற்பட்டது. பல மாவட்டங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறி இருப்பதால் தேர்வு உரிய நேரத்துக்குத் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வு நேரத்தை மாற்றி டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -2 (தொகுதி- 2, & 2ஏ)வின் முதன்மை எழுத்துத் தேர்வு இன்று (25.02.2023 முற்பகல் மற்றும் பிற்பகல்) 20 மாவட்டத் தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. வருகைப் பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாட்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக காலை வினாத் தாள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
தற்போது அந்த நிலைமை சரிசெய்யப்பட்டு, தேர்வு அனைத்து இடங்களிலும் துவங்கப்பட்டுள்ளது. இந்த கால தாமதத்தை ஈடுசெய்யும் வகையில் மதிய தேர்வு 2 மணிக்கு பதில் 2.30 மணிக்குத் துவங்கி 5.30 மணி வரை நடைபெறும் என தெரிவித்தார் .