கர்நாடகா மாநிலம் கோலார் டவுன் ரகமத் நகரில் வசித்து வருபவர் பாபு. இவரது மகன் ஜாபர் (9). இந்த சிறுவன் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன் நின்று விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு திடீரென தெருநாய்கள் கூட்டமாக வந்துள்ளன. சிறுவனை நோக்கி குறைத்துள்ளன. இதில் பதறிப்போன சிறுவன் அங்கிருந்து ஓட தொடங்கினான்.
ஆனாலும் தெருநாய்கள் அந்த சிறுவனை சுற்றி வளைத்து குடித்து குதறின. இதனால் வலியால் ஜாபர் கதறி துடித்தான். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார், சிறுவனை நாய்கள் கடித்து குதறுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் விரைந்து வந்து தங்கள் கையில் இருந்த லத்தியால் தெரு நாய்களை விரட்டியடித்து சிறுவன் ஜாபரை மீட்டனர். தெரு நாய்கள் கடித்து குதறியதில் ரத்த வெள்ளத்தில் சிறுவன் ஜாபர் உயிருக்கு போராடினான். அவனை போலீசார் மீட்டு ஜாலப்பா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜாபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவன் ஜாபரை, ரத்த வெள்ளத்தில் போலீசார் மருத்துவமனைக்கு தூக்கி வந்ததை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் அடைந்தனர்.
அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் ஜாபர் சிகிச்சை பெற்று வருகிறான். இதற்கிடையே தெருநாய் கடித்து குதறி சிறுவன் ஜாபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து அறிந்ததும், அவனது பெற்றோர் விரைந்து வந்தனர்.
மேலும், சிறுவன் ஜாபரை தெருநாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் நெஞ்சை பதற வைக்கும் வகையில் இருந்தது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து கோலார் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், தெரு நாய்களின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நகரசபைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.