குவஹாத்தி : அசாமில் தொடர்ந்து பெய்த கனமழையால் மாநிலம் முழுதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒன்பது மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பாதிக்கப்பட்ட அசாம் மக்களுக்கு மத்திய அரசு உதவும் என, உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
வட கிழக்கு மாநிமான அசாமில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சாலைகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டிருப்பதுடன், வீடுகளும் இடிந்து சேதமடைந்துள்ளன.
வெள்ளம் காரணமாக, 1,118 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
பக்சார், பர்பேடா, தரங்க், துப்ரி, கோல்பாரா, காம்ரூபா, லக்கிம்புர், நல்பாரி, உதல்குரி ஆகிய ஒன்பது மாவட்டங்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்படைந்துள்ளன.
இந்த மாவட்டங்களை சேர்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து உள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், பல ஆயிரம் பரப்பளவு பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தேஜ்புர், நியாமதி காட் ஆகிய இடங்களில் பிரம்மபுத்திரா நதி அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களை அசாம் மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பினர் மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.,வைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது வெள்ள பாதிப்பை சமாளிக்க போதுமான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று அமித் ஷா உறுதிஅளித்துள்ளார்.
இந்நிலையில், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஹரியானாவின் பஞ்ச்குலா பகுதியில், கடுமையான வெள்ளத்தில் கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருந்த பெண், பத்திரமாக மீட்கப்பட்டார்.
![]() |
62 ஆண்டுக்கு பின் ஒரே நாளில் மழை
வழக்கமாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1ம் தேதி துவங்கும். மும்பையை, ஜூன் 11ம் தேதியும், புதுடில்லியை, ஜூன் 27ம் தேதியும் அடையும். ஆனால் தற்போது, பருவமழையின் வழித்தடத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புதுடில்லியில், 1961, ஜூன் 21ம் தேதி ஒரே நாளில் பருவமழை துவங்கியது. அதற்கு, 62 ஆண்டுகளுக்குப் பின், ஒரே நாளில் இரு நகரங்களிலும் பருவமழை நேற்று துவங்கியுள்ளது. அதே நேரத்தில் புதுடில்லியில் வழக்கத்தைவிட இரண்டு நாட்களுக்கு முன்பும், மும்பையில், இரண்டு வாரங்கள் தாமதமாகவும் பருவமழை துவங்கியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்