புதுடெல்லி: அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே. மிஷ்ராவின் பதவிக் காலத்தை அக்டோபர் 15 வரை நீட்டிக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே. மிஷ்ராவுக்கு மத்திய அரசு மூன்றாவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியது. வரும் நவம்பர் வரை அவர் பதவியில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இம்மாதம் 31-ம் தேதிக்குள் எஸ்.கே. மிஷ்ரா தனது பதவியை ராஜினாமா செய்துவிட வேண்டும் என்று கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டது. அதற்குள் மத்திய அரசு மாற்று ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், எஸ்.கே. மிஷ்ராவுக்கான காலக்கெடு முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அவர் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை பதவியில் நீடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா 12 பக்க மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.