போபால்: பாகிஸ்தான் நண்பரை இந்திய பெண்ணான அஞ்சு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், தன்னைப் பொறுத்தவரையில் அவர் தன் மகளே இல்லை என்று அஞ்சுவின் தந்தை ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் அஞ்சு, ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். அஞ்சு இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிறகு நஸ்ருல்லாவை திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளி. தற்போது ஃபாத்திமா என்ற புதிய பெயரை அவர் சூட்டிக் கொண்டுள்ளார். 30 நாட்கள் விசாவில் பாகிஸ்தானுக்கு அஞ்சு சென்றுள்ளார்.
“எனக்கும் அவருக்கும் (அஞ்சு) இனி எந்தவித உறவும் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் அவர் உயிரிழந்துவிட்டார். அவரிடம் நான் கடந்த ஒரு வருடமாக பேசுவது இல்லை. கணவர் மட்டுமல்லாது இரண்டு குழந்தைகளை விட்டுச் சென்ற ஒரு பெண்ணுடன் நான் எப்படி உறவு கொண்டாட முடியும். அவர் இனி என் மகளே இல்லை” என மத்தியப் பிரதேசத்தில் வசித்து வரும் கயா பிரசாத் தாமஸ் தெரிவித்துள்ளார். அஞ்சுவுக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர். அவரது கணவர் அரவிந்த் ராஜஸ்தானில் வசித்து வருகிறார்.