மணிப்பூர் விவகாரம்: மத்திய அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் `நம்பிக்கையில்லா தீர்மானம்' எடுபடுமா?!

மணிப்பூரில் 80 நாள்களுக்கும் மேலாக நீடித்துவரும் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வலியுறுத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.

மணிப்பூர் வன்முறை – மோடி, அமித் ஷா

ஆனால், மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்க பிரதமர் நரேந்திர மோடி தயாராக இல்லை. எனவே, பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்றத்துக்கு வரவைத்து, மணிப்பூர் விவகாரம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க வைப்பதென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்தன. அதைத் தொடர்ந்து, பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவுசெய்தன.

எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ அணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதியும் மோடி அரசுக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை தனித்தனியாக மக்களவையில் அளித்திருக்கின்றன. பா.ஜ.க அரசுக்குப் பெரும்பான்மை பலம் இருக்கிறது.

பிரதமர் மோடி

எனவே, எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால், அரசுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. ஆனால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதன் மூலம், நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரத்தை பெரிய அளவுக்கு விவாதிக்க முடியும். அப்போது, ஆளும் பா.ஜ.க-வைக் கேள்விகளால் துளைத்தெடுக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன.

மணிப்பூர் விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார் என்று ஆளும் தரப்பு கூறிவருகிறது. ஆனால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதன் மூலம், பிரதமரை பதில் சொல்ல வைக்க முடியும் என்று எதிர்க்கட்சியினர் கருதுகிறார்கள்.

மொத்தம் 543 எம்.பி-க்கள் கொண்ட நாடாளுமன்றத்தில், பெரும்பான்மையை நிரூபிக்க 272 எம்.பி-க்கள் தேவை. ஆனால், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 331 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். பா.ஜ.க-வுக்கு மட்டுமே 303 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ கூட்டணிக்கு 144 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், பி.ஆர்.எஸ் போன்ற கட்சிகளுக்கு 70 எம்.பி-க்கள் இருக்கிறார்கள்.

மல்லிகார்ஜுன கார்கே

இந்த நிலையில், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதால், தங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதை பா.ஜ.க அரசு நிரூபிக்க வேண்டும். பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், ஆட்சி கவிழ்ந்துவிடும். பெரும்பான்மையை அரசு நிரூபித்தால், ஆட்சி தொடரும்.

இதற்கு முன்பாக, பல அரசுகளுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்திருக்கின்றன. மொராஜி தேசாய், சரண் சிங், வி.பி.சிங், ஏ.பி.வாஜ்பாய் ஆகியோர் தலைமையிலான அரசுகள், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்திருக்கின்றன.

ஏற்கெனவே, மோடி அரசுக்கு எதிராக 2018-ம் ஆண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதை 199 வாக்குகள் வித்தியாசத்தில் மோடி அரசு தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி

தற்போதும், பா.ஜ.க அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற வாய்ப்பு இல்லை. ஆனாலும், நாடாளுமன்றத்தில் மணிப்பூர் குறித்துப் பேச முடியாது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் பிரதமர் மோடியை, நாடாளுமன்றத்துக்கு வந்து பேசுவதற்கான நிர்ப்பந்தத்தை நம்பிக்கையில்லாத் தீர்மானம் உருவாக்கும். நாடாளுமன்றத்தில் மோடி பதிலளித்துவிட்டால், அதை எதிர்க்கட்சிகள் தங்களின் வெற்றியாக கருதும். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், பா.ஜ.க-வுக்கு அரசியல்ரீதியான பின்னடைவாக அது பார்க்கப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.