2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? 2019 திரும்ப வாய்ப்பு உள்ளதா?

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூறிவரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

மோடி அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கோடு காங்கிரஸ், இடது சாரிகள் பல்வேறு மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் பிராந்திய கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. பாஜகவுக்கு எதிரான குரல்கள் அனைத்தும் ஒரே அணியில் இடம்பெற்றால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும், மூன்றாவது அணி அமைந்தால் அது பாஜகவுக்கு சாதகமாக அமையும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் முரண்களை மறந்து கை கோர்த்துள்ளன.

ஸ்டாலின் கையில் முக்கிய ரிப்போர்ட்: விஷயம் லீக்கானது எப்படி? அமைச்சர்களுக்கு விழுந்த டோஸ்!

இருப்பினும் இரு கூட்டணிகளிலும் இணையாத கட்சிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம், தெலங்கானாவில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒரிசாவில் பிஜு ஜனதா தளம், உத்திர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் இரண்டு பக்கமும் சேராமல் தனியாக நிற்கின்றன.

தேர்தல் நெருங்க நெருங்க இந்த கட்சிகள் எந்த கூட்டணியிலாவது இணைவார்களா, அல்லது தனியே தேர்தலை சந்திப்பார்களா என்ற கேள்வி எழுகிறது. இவைகளில் ஒரு சில கட்சிகள் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பக்கம் செல்லவும், மீதமுள்ளவை தனித்து போட்டியிடவே செய்யும், இந்தியா கூட்டணியில் இணைவது கடினம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதற்கு வலு சேர்க்கும் வகையில் கர்நாடகாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும், உத்தரபிரதேசத்தின் பகுஜன் சமாஜ் கட்சியும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன.

நேற்றைய தினம் மஜக கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, “வரும் மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்தே போட்டியிடும். எங்கள் கட்சி ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றாலும் கூட நாங்கள் இந்த மக்களவைத் தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம்” என்று கூறியுள்ளார்.

கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும், இரு கூட்டணிகளிலும் பங்கெடுக்காமல் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்தார். பிற கட்சிகள் இன்னும் அறிவிக்கவில்லை.

இரண்டு கட்சிகள் வெளிப்படையாக தனித்து போட்டி என அறிவித்துள்ளதால் இந்தியா கூட்டணியில் அதிருப்தியடையும் கட்சிகள் இவர்களோடு இணையக்கூட வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு மூன்றாவதாக ஒரு அணி திரண்டால் அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்து மீண்டும் 2019 நிலையை ஏற்படுத்தக் கூடும் என்று அரசியல் வானிலையை கணிப்பவர்கள் கூறுகின்றனர்.

இந்தியா கூட்டணி நிலைத்து நின்று பாஜகவின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள், அந்த கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஒற்றுமையை பாதுகாப்பதோடு, தனித்து நிற்கும் கட்சிகளை தங்கள் பக்கம் இழுப்பதும் அவர்களது பணியாக உள்ளது. அப்படி நிகழும் போதுதான் பாஜகவுக்கு நெருக்கடி அளிக்கலாம் என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.