அரசு துறைகளில் பெரிய சம்பவம்… உள்ளே நுழையும் AI தொழில்நுட்பம்… டாப் கியரில் எகிறும் கோவா!

ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது. இது ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். எழுத்துப்பூர்வமாக அல்லது வாய்ஸ் மூலம் கமாண்ட் செய்தால் தேவையான பதில்களை அளிக்கும். இதன்மூலம் கடினமான வேலைகள் எளிதாகும் சூழல் வந்துவிட்டது. நாம் இருக்கும் இடத்தில் இருந்தே தேவைப்படும் விஷயங்களை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதனால் பல்வேறு துறைகள் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகி விட்டன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

அதேசமயம் ஏ.ஐ வருகையால் ஊழியர்கள் வேலையிழப்பிற்கு வாய்ப்பிருப்பதாக ஒருவித அச்சம் நிலவுகிறது. ஆனால் இது புதிய கதவுகளை திறந்துவிடும். வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் அரசு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு வரும் முயற்சியில் கோவா மாநில அரசு களமிறங்கியுள்ளது. இதை மட்டும் அமல்படுத்தி விட்டால் ஏ.ஐ அறிமுகம் செய்த முதல் மாநிலம் என்ற பெருமையை கோவா பெற்றுவிடும்.

கோவை அமைச்சர் தகவல்

இதுதொடர்பாக கோவா சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரோஹன் கவுண்டே, அரசு துறைகளில் குடிமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஏ.ஐ தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும். இதன்மூலம் அரசின் செயல்பாடுகள் சிறப்பான முறையில் மேம்படுத்தப்படும். பொதுமக்களின் தேவைகளும் சரியாக பூர்த்தி செய்யப்படும். முதல்கட்டமாக Chatbots-கள் சுற்றுலா, பொதுமக்கள் குறைதீர்க்கும் துறைகளில் செயல்படுத்தப்படும்.

சாட்பாட் மூலம் பரிமாற்றம்

இதனை கோவா அரசின் இணையதளங்களில் பெற முடியும். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் அதை தக்க வைத்து கொள்ளும் திட்டங்களால் கோவா மாநிலம் தொழில்நுட்ப பொருளாதாரத்திற்கு வித்திட்டு வருகிறது. இதில் மிகப்பெரிய எழுச்சியை அடையும். வளர்ச்சியின் படிநிலைகளில் புதிய புரட்சியை உண்டுபண்ணும். ஐடி துறையினருக்கு சிறப்பான பணிச்சூழலை அளிக்க Workation Goa என்ற பெயரில் கோவா தயாராகி வருகிறது.

புதிய பணிச்சூழல்

இதற்காக மோர்ஜிம், ஆஷ்வெம், பெனவுலிம் ஆகிய பகுதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 4S என்று சொல்லப்படும் Sea, Sun, Sand, Software ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அனுபவத்தை வழங்கும் என்று அமைச்சர் ரோஹன் கவுண்டே தெரிவித்தார். கோவா மாநிலத்தில் 35 துறைகளின் 227 சேவைகள் முழுவதுமாக ஆன்லைனிற்கு மாறியுள்ளன. இதில் 6.8 லட்சம் பதிவு செய்த பயனாளர்கள் இருக்கின்றனர்.

டிஜிட்டல் மயமாக்கும் வேலைகள்

அவர்கள் மூலம் 22.57 லட்சம் பரிமாற்றங்கள் நடந்துள்ளன. அடுத்தகட்டமாக சுற்றுலா, பதிவுத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிரிண்டிங் மற்றும் பல்பொருள் துறை, ஆவணங்கள், ஐடி துறை ஆகியவற்றில் பொதுமக்களுக்கான ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் 30 கோடி ரூபாய் செலவில் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்திருப்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.