மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை.. ஒரே நாளில் கிடுகிடுவென 30 ரூபாய் அதிகரிப்பு.. என்ன காரணம்?

சென்னை: கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கிலோ ரூ.110க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 30 ரூபாய் அதிரடியாக உயர்ந்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி பெட்ரோல், டீசல், தங்கம், வெள்ளி விலையை கவனித்து வந்த பொதுமக்கள் தற்போது தினமும் தக்காளி, வெங்காயம் விலையை அச்சத்தோடு பார்த்து வருகின்றனர். தக்காளி விலை 140 வரை உயர்ந்த நிலையில், படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில், வரத்து குறைவால் மீண்டும் தக்காளி விலை வெகுவாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று கிலோ ரூ.140க்கு விற்பனையாகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.

சென்னை கோயம்பேட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் ரூபாய் 30 உயர்ந்து ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை கடைகளிலும் மேலும் விலை உயர்ந்து ரூ. 160 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் 1000 முதல் 1200 டன் வரை தக்காளி வரத்து இருந்த நிலையில் இன்று 300 டன் தக்காளி மட்டுமே வந்துள்ளது. இதன் காரணமாகவே ஒரே நாளில் 30 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த நிலை நீடித்தால் மேலும் விலை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, சென்னையில் நியாய விலைக்கடைகள் மற்றும் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ரூபாய் 60க்கு விற்பனை நடந்து வருகிறது, தமிழ்நாடு முழுவதும் உள்ள 300 ரேஷன் கடைகளிலும் விலை மலிவாக தக்காளி விற்பனை நடைபெற்று வருகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.