புதுடில்லி, கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் எட்டு பேரின், மரண தண்டனை சிறை தண்டனையாக குறைக்கப்பட்டு உள்ளது.
இந்திய கடற்படையில் கமாண்டராக பணியாற்றியவர் பிர்னந்து திவாரி.
இவர் உள்ளிட்ட இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் எட்டு பேர், தனியார் நிறுவனம் சார்பில், மேற்கு ஆசிய நாடான கத்தாரின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு போர் பயிற்சி அளித்து வந்தனர்.
அப்போது, கத்தார் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக, 2022ல் எட்டு பேரும், அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர். பின், அவர்கள் எட்டு பேருக்கும், அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, கத்தார் நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த கத்தார் நீதிமன்றம், எட்டு பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை, சிறை தண்டனையாக குறைத்துள்ளது.
இது தொடர்பாக, நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்து, நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. கடற்படையின் முன்னாள் வீரர்கள் எட்டு பேருக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனை, சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. முழுமையான தீர்ப்பு நகலுக்காக காத்திருக்கிறோம்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதற்காக, சட்ட நிபுணர்கள் மற்றும் வீரர்களின் குடும்பத்தினருடன் தொடர்ந்து பேசி வருகிறோம். நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன், கத்தாருக்கான நம் துாதர் மற்றும் அதிகாரிகள் ஆஜராகினர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் நடந்த சுற்றுச்சூழல் தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, கத்தார் அரசர் ஷேக் தமித் பின் ஹமாத்தை சந்தித்து பேச்சு நடத்தினார்.
அப்போது, கத்தாரில் வாழும் இந்தியர்களின் நலன்களை பாதுகாப்பது குறித்து, அவரிடம் மோடி எடுத்துரைத்தார். இதையடுத்தே, இந்திய வீரர்களின் தண்டனை குறைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்