Aam Aadmi Party upheaval in rejection of decorative vehicles | அலங்கார ஊர்திகள் நிராகரிப்பு ஆம் ஆத்மி கட்சி கொந்தளிப்பு

புதுடில்லி, தலைநகர் டில்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, டில்லி மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி தரப்படவில்லை.

இது, மத்திய அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என, ஆம் ஆத்மி கட்சி விமர்சித்துள்ளது.

டில்லியில் அடுத்த மாதம் ௨௬ல் குடியரசு தினவிழா அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்.

அணிவகுப்பில் எந்தெந்த மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெற வேண்டும் என்பதை, மத்திய அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்வுக்குழு முடிவு செய்யும்.

இந்தாண்டுக்கான தேர்வில், டில்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் அலங்கார ஊர்திகளை தேர்வுக்குழு நிராகரித்துள்ளது. அரசியல் காரணங்களுக்காகவே தங்களது அரசுகளின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதாக, ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் கூறுகையில், ”பஞ்சாப் மாநில அரசின் நலத்திட்டங்களை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்தியை நிராகரிப்பது, தேசிய கீதத்தில் இருந்து பஞ்சாப் என்ற வார்த்தையை நீக்கும் நடவடிக்கையை போன்றது,” என்றார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறுகையில், ”டில்லி, பஞ்சாப் மாநில அரசுகளின், அலங்கார ஊர்திகளின் மாதிரிகள், அரசியல் நோக்கத்துடன் நிராகரிக்கப்பட்டு உள்ளன.

”பா.ஜ., ஆளும் அசாம், குஜராத், உத்தர பிரதேசம் மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக வாய்ப்பு வழங்கப்பட்டுஉள்ளது,” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.