
மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த விஜயகாந்த் : வழிநெடுக மக்கள் கண்ணீர் அஞ்சலி
திரைத் துறையில் கால் பதித்து, பெரும்புகழ் ஈட்டி, அரசியல் களத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்த நடிகர் விஜயகாந்த், 71, சென்னையில் நேற்று காலமானார். தேடி வந்தவர்களின் பசியை போக்கி, ஏழை மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்த விஜயகாந்த்திற்கு தமிழக கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

திரையுலகை சேர்ந்த ரஜினி, கமல், இளையராஜா, விஜய், சத்யராஜ், எஸ்பி முத்துராமன், டி.ராஜேந்தர், ஏ.ஆர்.முருகதாஸ், பாக்யராஜ், கேஎஸ் ரவிக்குமார், அர்ஜூன், விமல், குஷ்பு, சுந்தர் சி, பார்த்திபன், ராம்கி, லிவிங்ஸ்டன், தேவா, விஜய் ஆண்டனி, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ், எம்எஸ்.பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பல திரையுலக கலைஞர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தேமுதிக., தொண்டர்கள் மற்றும் ஏராளமான ரசிகர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

தீவுத்திடலில் விஜயகாந்த்திற்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் ஊர்வலமாக சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக., தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும் மக்கள் விஜயகாந்த்திற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். எங்கும்பார்த்தாலும் மக்களின் தலையாக விஜயகாந்த்தின் ஊர்வலத்தில் தெரிந்தது. மக்கள் வெள்ளத்தில் விஜயகாந்த் இறுதிஊர்வலம் நடந்தது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
