வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சான்ட்டியாகோ: சிலி நாட்டில் 7.1 கிலோ எடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எடை 2.5 கிலோ முதல் 4கிலோ வரை இருக்கும். 4 கிலோக்கு மேல் பிறக்கும் குழந்தைகள் உடல் பருமனாகக் கருதப்படுவதோடு பிறவி குறைபாடுகள் இருக்கலாம். 1.5 கிலோவுக்கு குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகள் ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த குழந்தைகளின் எடையை மேம்படுத்த, சிறப்பு உணவு குழாய்கள் கொண்ட இன்குபேட்டர்களில் வைக்கப்படுகின்றனர்.
ஆனால், சிலி நாட்டில் ஆண் குழந்தை ஒன்று 7.1 கிலோ எடையில் பிறந்துள்ளது. அதிக எடைக் கொண்ட பிறந்த குழந்தைகளில் இதுவரை 7 கிலோவை தொட்டது இல்லை. அந்நாட்டில் ஏற்கனவே 6.7 கிலோ எடையுடன் பிறந்த குழந்தையின் சாதனையை தற்போது பிறந்துள்ள குழந்தை முறியடித்துள்ளது. குழந்தையின் தாய், தந்தை குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இது குறித்து அந்நாட்டு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உடல்நலக் குறைபாடுகள் காரணமாக குழந்தையை வேறு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். குழந்தை தற்போது சீரான நிலையில் இருக்கிறது. அவரது தாயார் தான் பெற்றெடுத்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement