வாரணாசி: ஞானவாபி வளாகத்தின் ஆய்வு அறிக்கையை, நான்கு வாரங்களுக்கு பொது வெளியில் வெளியிட வேண்டாம்’ என, வாரணாசி நீதிமன்றத்தில், இந்திய தொல்லியல் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோவிலையொட்டி, ஞானவாபி வளாகம் அமைந்து உள்ளது.
இங்கு முந்தைய காலத்தில் ஹிந்து கோவில்கள் இருந்ததாகவும், அவற்றை இடித்து மசூதி கட்டப்பட்டு இருப்பதாகவும், அங்கு ஆய்வு நடத்த அனுமதிக்கக் கோரியும், ஹிந்துக்கள் சிலர் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூலையில், ஞானவாபி வளாகத்தில் ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதன்படி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வு நடத்திய தொல்லியல் துறை அதிகாரிகள், வாரணாசி நீதிமன்றத்தில், சீலிடப்பட்ட உறையில் தங்களது ஆய்வு அறிக்கையை, கடந்த டிச., 18ம் தேதி சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஞானவாபி வளாகத்தின் ஆய்வு அறிக்கையை, நான்கு வாரங்களுக்கு பொது வெளியில் வெளியிட வேண்டாம் என, இந்திய தொல்லியல் துறை வலியுறுத்தியதாக, ஹிந்து அமைப்பு தரப்பு வழக்கறிஞர் மதன் மோகன் யாதவ் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை, இன்றைய தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த டிச., 19ம் தேதி, ஞானவாபி வளாகத்தின் பராமரிப்பை எதிர்த்து, முஸ்லிம் அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை, அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அப்போது நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் கூறுகையில், ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் விசாரணையை, ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். தேவைப்பட்டால், தொல்லியல் துறை மேலும் ஆய்வு நடத்த கீழமை நீதிமன்றம் அனுமதி வழங்கலாம்’ என்றார்.
இதை மேற்கோள்காட்டி, ஆய்வு அறிக்கையை நான்கு வாரங்களுக்கு வெளியிட வேண்டாம் என, இந்திய தொல்லியல் துறை சார்பில், வாரணாசி நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஞானவாபி வளாகத்தில், தொழுகை நடத்துவதற்கு முன், கை கழுவ பயன்படும் சிறிய குளம் போன்ற, ‘வசு கானா’வை சுத்தம் செய்வது தொடர்பான வழக்கிலும், வாரணாசி நீதிமன்றம் இன்று முடிவெடுக்க உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்