இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் 2024 மார்ச் மாதம் 20 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட முப்பத்திரண்டு (32) இந்திய மீனவர்களுடன் ஐந்து (05) இந்திய மீன்பிடிப் படகுகள் கைது செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பை அத்துமீறி வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் ரோந்து பணிகளை அதிகரித்து தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்திய மீன்பிடி படகுகளைக் கண்காணித்த வடக்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகயின் கடற்படையினர் 2024 மார்ச் 20 ஆம் திகதி இரவு குறித்த கடற்படை கட்டளைகளின் கடலோர ரோந்துப் படகுகள் மற்றும் விரைவுத் தாக்குதல் படகுகள் மூலம் இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அப்போது தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் ஏழு (07) இந்திய மீனவர்களும் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூன்று (03) இந்திய மீன்பிடி படகுகளுடன் இருபத்தைந்து (25) இந்திய மீனவர்களும் இவ்வாரு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளும், அதில் இருந்த ஏழு (07) இந்திய மீனவர்களும் தலைமன்னார் ஜெட்டிக்கும் வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மூன்று (03) இந்திய மீன்பிடி படகுகளும் இருபத்தைந்து (25) இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகர் மற்றும் மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

மேலும், இந்த நடவடிக்கையுடன் 2024 ஆம் ஆண்டில் இதுவரை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இருபத்திமூன்று (23) இந்திய மீன்பிடி படகுகளும் நூற்று எழுபத்தெட்டு (178) இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.