"2024-லேயே ராஜ்ய சபா சீட் உறுதி என அதிமுக எழுதிக்கொடுத்தது; எங்கள் நிலைப்பாட்டை…" – பிரேமலதா

அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்படுமா என்பது கடந்த சில நாள்களாகவே பேசுபொருளாகவே இருந்த நிலையில், தே.மு.தி.க-வுக்கு இப்போது இல்லை, 2026-ல் ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் என்று அ.தி.மு.க இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க-வின் இத்தகைய அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது 5 தொகுதிகளுடன் ஒரு ராஜ்ய சபா சீட்டும் உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான்.

பிரேமலதா – எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் அமைச்சர்களும் உறுதிசெய்து, வாய்வழியாக மட்டுமல்லாமல் எழுத்துப்பூர்வமாகவும் கொடுத்தது உண்மைதான்.

அறிவிக்க வேண்டிய இடத்தில் அ.தி.மு.க இருப்பதால்தான் இவ்வளவு நாள்கள் சொல்லவில்லை. இப்போது 2025-ல் இல்லை 2026-ல் ராஜ்ய சபா சீட் என அறிவித்திருக்கிறார்கள்.

அரசியல் என்பதே தேர்தலையொட்டி தான். அவர்களுடைய கடமையை அ.தி.மு.க ஆற்றியிருக்கிறார்கள். தேர்தலையொட்டி எங்கள் கடமையை நாங்கள் ஆற்றுவோம்.

2024 தேர்தலின்போது வருடத்தைக் குறிப்பிட்டுத் தாருங்கள் என்று சொன்னபோது, வருடம் குறிப்பிட்டுத் தருவது வழக்கமல்ல உறுதியாக உங்களுக்கு சீட் தருகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னார்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

அது 2026 என்று இப்போது அறிவித்திருக்கிறார்கள். 2026 ஜனவரி 9-ம் தேதி கடலூர் மாவட்டத்தில் எங்களுடைய கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று ஏற்கனவே கூறிவிட்டோம்.

அரசியலில் தேர்தலை நோக்கிதான் எங்களின் பயணமும் இருக்கும்.” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.