புதுடெல்லி: மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற போது தனது கணவர் ராஜா ரகுவன்சியை கொலை செய்ய திட்டம் தீட்டி கொடுத்ததோடு, கொலையை நேரில் பார்த்த குற்றச்சாட்டில் சோனம் ரகுவன்சி கைதாகி உள்ளார். இந்நிலையில், போலீஸ் விசாரணையில் தனது குற்றத்தை சோனம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு பிரிவு காவலர்களிடம் சோனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று இந்த வழக்கில் கைதாகி உள்ள ராஜ் குஷ்வாகா, ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. >>விரிவாக வாசிக்க
முதலில் கொள்ளை வழக்கு போல ஜோடிப்பதற்கு சோனம் முயன்றார். காவல் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போதும் அதையே தான் சொல்லி உள்ளார். முன்னதாக, காசிப்பூரில் இருந்து ஷில்லாங் வரையில் போலீஸார் உடனான பயணத்தில் அவர் கனத்த மவுனம் காத்துள்ளார்.
இந்த சூழலில்தான் அவருக்கு எதிராக உள்ள ஆதாரங்களை ஷில்லாங் போலீஸார் அவரிடம் சுட்டிக்காட்டி உள்ளனர். கொலைக்கு பிறகு கொலையாளிகளை சோனம் சந்தித்த சிசிடிவி காட்சிகள், தொலைபேசி அழைப்பு பதிவேடு, ரெயின் கோட் மற்றும் கொலை நடந்த இடத்தில் இருந்து ரத்தக்கறை படிந்த அவரது சட்டை உள்ளிட்டவற்றை போலீஸார் காட்டியுள்ளனர்.
இதற்கு பிறகு உடைந்து அழுத சோனம், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. “சோனத்துக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் வலுவாக உள்ளது” என ஷில்லாங் போலீஸ் எஸ்பி விவேக் புதன்கிழமை அன்று கூறினார்.
நடந்தது என்ன? – மத்தியப் பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனம் (25) என்பவருக்கும் கடந்த மே 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தேனிலவை கொண்டாட மேகாலயா சென்றனர். கடந்த மே 23-ம் தேதி ராஜாவையும் சோனத்தையும் காணவில்லை. கடந்த ஜூன் 2-ம் தேதி மேகாலயாவின் சிரபுஞ்சியில் உள்ள வெய் சாவ்டாங் அருவி அருகே உள்ள பள்ளத்தாக்கில் ராஜா ரகுவன்சியின் உடல் மீட்கப்பட்டது.
மேகாலயா போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜா ரகுவன்சி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அவரது மனைவி சோனம், காதலர் ராஜ் குஷ்வாகா (21) மற்றும் ஆகாஷ் (19), விஷால் (22), ஆனந்த் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை வழக்கு குறித்து மேகாலயா போலீஸார் கூறும்போது, “கடந்த மே 11-ம் தேதி ராஜா ரகுவன்சி, சோனம் திருமணம் நடைபெற்றது. கணவரை கொலை செய்துவிட்டு காதலர் ராஜ் குஷ்வாகாவுடன் நேபாளத்துக்கு தப்பிச் செல்ல சோனம் சதித் திட்டம் தீட்டினார். இதற்காக தேனிலவுக்கு செல்ல அவர் வலியுறுத்தினார். புது மனைவியின் விருப்பத்துக்கு மதிப்பளித்து மேகாலயாவில் தேனிலவை கொண்டாட ராஜா ஒப்புக் கொண்டார்.
இதனிடையே சோனமும் அவரது காதலர் ராஜ் குஷ்வாகாவும் செல்போனில் ரகசியமாக பேசி, ராஜா ரகுவன்சியை கொலை செய்ய விரிவான சதித் திட்டத்தை தீட்டினர். இதன்படி தனது நண்பர்கள் ஆகாஷ், விஷால் ஆகியோரை இந்தூருக்கு ராஜ் குஷ்வாகா வரவழைத்தார். அவர்களை சோனத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
ராஜா ரகுவன்சியும் சோனமும் தேனிலவுக்காக புறப்பட்டபோது ஆகாஷும் , விஷாலும் புதுமணத் தம்பதியை பின்தொடர்ந்தனர். அவர்களோடு ஆனந்த் என்பவரும் இணைந்து கொண்டார். யாருக்கும் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக சோனத்தின் காதலர் ராஜ் குஷ்வாகா, இந்தூரிலேயே தங்கிவிட்டார். கடந்த மே 23-ம் தேதி ராஜா ரகுவன்சியும் சோனமும் மேகாலயாவின் சிரபுஞ்சியில் உள்ள வெய் சாவ்டாங் அருவிக்கு சென்றனர். அவர்களை ஆகாஷ், விஷால், ஆனந்த் பின்தொடர்ந்தனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி ராஜா ரகுவன்சியுடன் 3 பேரும் அறிமுகமாகினர்.
புதுமண தம்பதியுடன் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் உடன் சென்றார். தனிமையில் பொழுதை கழிக்க வேண்டும் என்று கூறி அந்த சுற்றுலா வழிகாட்டியை சோனம் திருப்பி அனுப்பிவிட்டார். பின்னர் செல்பி புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறி சிசிடிவி கேமராக்கள் இல்லாத மலை உச்சிக்கு கணவர் ராஜா ரகுவன்சியை, சோனம் தனியாக அழைத்து சென்றுள்ளார். அப்போது ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் பின்தொடர்ந்து வந்து ராஜா ரகுவன்சியை கோடரியால் தலையில் பலமாக தாக்கி உள்ளனர். படுகாயமடைந்த அவர் கீழே சரிந்து விழுந்தார். ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அப்போது ஆகாஷ் உள்ளிட்ட 3 பேருடன் சோனமும் இணைந்து ராஜா ரகுவன்சியை சுமார் 200 அடி ஆழமான பள்ளத்தில் தூக்கி வீசியுள்ளார். பின்னர் 4 பேரும் இரு மோட்டார் சைக்கிள்களில் சுமார் 25 கி.மீ. தொலைவு பயணம் செய்துள்ளனர். இதன்பிறகு ரயில், பேருந்துகள் மூலம் அவரவர் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.
சோனத்தின் காதலர் ராஜ் குஷ்வாகா உத்தர பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர். அந்த மாநிலத்தில் காதலரின் நண்பர்கள் வீடுகளில் சோனம் பாதுகாப்பாக தங்கி உள்ளார். ஆனால் ராஜ் குஷ்வாகா, ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதால் வேறு வழியின்றி சோனமும் தானாக முன்வந்து சரண் அடைந்துள்ளார்.
ராஜா ரகுவன்சியை கொலை செய்ய ரூ.20 லட்சம் வழங்குவதாக சோனம் வாக்குறுதி அளித்திருக்கிறார். சில லட்சங்களை அவர் முன்பணமாக வழங்கியிருக்கிறார். அவர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் ரூ.9 லட்சம் ரொக்கமும் ஏராளமான தங்க நகைகளும் இருந்தன” என்று மேகாலயா போலீஸார் தெரிவித்துள்ளனர்.