புதுச்சேரி: புதுச்சேரியில் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தாதது கண்டிக்கத்தக்க ஒன்று என அதிமுக தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியது: “மத்தியில் பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பட்டியலினத்தவர், சமுதாயத்தில் பின் தங்கிய ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலையில் உள்ள மக்களின் ஏற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அம்பேத்கரின் எண்ணப்படி, சமுதாயத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களின் பிள்ளைகள் தரமாக கல்வி பயில வேண்டும் என மத்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டத்தின் படி நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் ஏழை, எளிய குழந்தைகள் தரமான கல்வி பயில 25 சதவீத மாணவர்களுக்கு கட்டணமில்லா இலவச கல்வியை வழங்க வேண்டும். இதற்காக கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும்.
தமிழகத்தில் ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சியில் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தரமான தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத ஏழை மாணவர்கள் இலவச கல்வி பெறுகின்றனர். மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜகவின் கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தை இங்கு அமல்படுத்தாது வியப்பாக உள்ளது.
இன்று வரை தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தாதது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். இதற்கு மேலும் புதுச்சேரி ஏழை, எளிய மாணவர்களின் இலவச கல்வி பயிலும் உரிமைகள் பறிக்காமல் இத்திட்டத்தை செயல்படுத்த துணை நிலை ஆளுநர், முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்கலை.யில் இடஒதுக்கீடு: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழத்தில் உள்ள அனைத்து பாடங்களிலும் 25 சதவீத உள் ஒதுக்கீட்டை புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டும். கடந்த 20 ஆண்டு காலமாக சில குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் வழங்கப்படும் 25 சதவீத புதுச்சேரி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டை பெற துணை நிலை ஆளுநர் உரிய நடவடிக்கையை எடுக்காதது வருத்தமளிக்க கூடிய விஷயமாகும்.
புதுச்சேரி மாணவர்களுடைய உரிமையை பெற்றுத்தர வேண்டியது துணை நிலை ஆளுநருடைய தலையாய கடமையாகும். இது சம்பந்தமாக புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர், மத்திய அரசு அனுமதியளித் தால் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டியது பல்கலைக்கழக துணை வேந்தரின் பொறுப்பாகும்.
‘நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தபட்சம் 50 சதவீத இடஒதுக்கீடு மாநில ஒதுக்கீடாக வழங்க வேண்டும்’ என மத்திய பாஜக அரசு முடிவெடுத்து, தேசிய மருத்துவ கவுன்சில் மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அரசாணை வெளியிட்டது. புதுச்சேரியில் ஆளும் பாஜக கூட்டணி அரசானது மத்திய அரசின் இந்த அறிவிப்பை கூட செயல்படுத்த முன்வராதது மத்திய பாஜக அரசுக்கு நேர் எதிர் செயல்பாடாக உள்ளது.
இதிலும் முதல்வர், துணைநிலை ஆளுநர் இணைந்து இந்த கல்வியாண்டில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசின் இட ஒதுக்கீடாக வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்று அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.