தெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டுக்கான ஐ.நா.தூதர் அமீர் சயீத் இரவானி தெரிவித்தார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் பேசிய அமீர் சயீத் இரவானி, “இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளுக்கு எதிரானவை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இஸ்ரேல் பல ஈரானிய நகரங்களில் உள்ள பல பொதுமக்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து ஆக்கிரமிப்புச் செயல்களை நடத்தி வருகிறது” என்று அவர் கூறினார்.
ஐ.நா தலைவர் வேண்டுகோள்: இஸ்ரேல்-ஈரான் பதற்றத்திற்கு பிறகு எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஐ.நா. தலைவர் அன்டோனியோ குத்ரேஸ், “ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் எதிர் தாக்குதல்களை நிறுத்த வேண்டிய நேரம் இது. அமைதியும், ராஜதந்திரமும் மேலோங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்
ஜெருசலேம் அருகே ஈரானின் தாக்குதல்கள்: இன்று (ஜூன் 14, 2025) அதிகாலை ஜெருசலேம் மீது வானத்தில் சைரன்கள் மற்றும் வெடி சத்தங்கள் கேட்டன. ஏற்கெனவே ஏவுகணை அலைகளால் பீதியடைந்த பொதுமக்களை பாதுகாப்பு முகாம்கள் நோக்கிச் செல்ல இஸ்ரேலிய ராணுவம் வலியுறுத்தியது.
ஈரானில் இருந்து சமீபத்திய தாக்குதல்களில் டஜன் கணக்கான ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஈரான் ராணுவத்தின் செய்தி அறிக்கையில், ” இஸ்ரேல் மீது டஜன் கணக்கான ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதில் சில ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன. நாடு முழுவதும் பல இடங்களில் தேடுதல் மற்றும் மீட்புப் படைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. அங்கு ஏவுகணைகள் விழுந்ததாக தகவல்கள் வந்துள்ளன” என்று தெரிவித்துள்ளது.
பின்னணி என்ன? – ஈரானின் அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீர் தாக்குதல் நடத்தியது. 200-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மூலம் ஈரான் முழுவதும் குண்டுகள் வீசப்பட்டன.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி மையம், இஸ்ஃபகான் நகரில் உள்ள அணுசக்தி தொழில்நுட்ப மையம், மர்காஸி மாகாணம் அராக் நகரில் உள்ள கனநீர் அணு உலை மையம் ஆகியவையும் இஸ்ரேலின் தாக்குதலில் தகர்த்து அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில், ஈரானின் மூத்த அணுசக்தி விஞ்ஞானிகள் அப்துல் ஹமீது, அகமதுரசா, சையது அமீர் உசைன், மோட்லாபிசாடே, முகமது மெஹதி, அப்பாஸி ஆகிய 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது, ஈரானின் அணு ஆயுத திட்டத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இஸ்ரேலின் 2-வது தாக்குதலில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ குடியிருப்புகள் மீது ட்ரோன்கள் துல்லிய தாக்குதல் நடத்தியதில், ஈரான் ராணுவ தளபதி முகமது பகேரி, இஸ்லாமிக் புரட்சி காவல் படையின் தளபதி உசைன் சலாமி, கதம் அல் அன்பியா என்ற ஈரான் போர் கட்டளை தலைமையகத்தின் தளபதி கோலாம் அலி ரஷீத் ஆகியோர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ராணுவம் நேற்று 100 ட்ரோன்களை அனுப்பியது. இதுகுறித்து பேசிய ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி, “அவர்கள் செய்த இந்தப் பெரிய குற்றத்திலிருந்து பாதுகாப்பாகத் தப்பிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.”என்றார்