புனே அருகே இரும்புப் பாலம் இடிந்து விழுந்து விபத்து: 2 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

புனே: புனேவில் உள்ள இந்திரயானி ஆற்றின் மீது இருந்த இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் சுற்றுலா பயணிகள் சிலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த இரும்புப் பாலத்தின் கீழ் சிலர் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

புனேவில் மாவல் தாலுகாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் உள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்த நேரத்தில், பாலத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் பெருக்கெடுத்து ஓடிய ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல்துறை மற்றும் பேரிடர் நிவாரணப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை இரண்டு பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, வலுவான நீர் ஓட்டம் பாலம் இடிந்து விழுந்ததற்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது 15 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

கடந்த நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட இந்த பாலத்தின் பாதுகாப்பு குறித்து அப்பகுதி மக்கள் ஏற்கெனவே கவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா முதல்வர் இரங்கல்: இதற்கிடையில், புனே பாலம் விபத்து குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி. அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட கோட்ட ஆணையர், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட தாசில்தார் ஆகியோருடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை, 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் 32 பேர் காயமடைந்துள்ளனர், 6 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

அரசு நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளது, மேலும் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட கோட்ட ஆணையர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.