டெல் அவிவ்: இன்று (திங்கள்கிழமை) அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதனால் இஸ்ரேல் முழுவதும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன. இஸ்ரேலின் வடக்கு மற்றும் மையப் பகுதியில் ஏவுகணைகள் தாக்கியதில் 67 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானும் இஸ்ரேலை கடுமையாக தாக்கி வருகிறது. இன்று (திங்கள்கிழமை) அதிகாலையும் ஈரான் பல ஏவுகணைகளை இஸ்ரேல் நகரங்கள் மீது வீசியது. ஈரானிய ஏவுகணைகளைத் தடுத்த இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகளிலிருந்து வந்த சக்திவாய்ந்த வெடிப்பு சத்தங்கள், இன்று அதிகாலையில் டெல் அவிவை உலுக்கியது, இதனால் அந்த நகரத்தின் மீது கரும்புகை வானத்தில் எழுந்தன.
டெல் அவிவ் அருகே உள்ள மத்திய இஸ்ரேலிய நகரமான பெட்டா டிக்வாவில் நகரை, ஈரானிய ஏவுகணைகள் தாக்கின. அங்குள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தை ஏவுகணைகள் தாக்கியதில், அந்த கட்டிடங்கள் பெரிதும் சேதமடைந்தன. மீட்புப் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், அந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
அதே போல இன்று அதிகாலை ஜெருசலேம் நகரிலும் பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்டன. இஸ்ரேல் ராணுவம் ஈரானில் இருந்து புதிய ஏவுகணை தாக்குதல்கள் குறித்து எச்சரித்து, பொதுமக்கள் மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்திய சிறிது நேரத்திலேயே இந்த தாக்குதல் நடந்தது.
இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் ஈரானில் இருந்து மீண்டும் ஒரு புதிய ஏவுகணை தாக்குதல் இருக்கும் என எச்சரித்துள்ளது. அந்த அறிவிப்பில், “சிறிது நேரத்திற்கு முன்பு, இஸ்ரேல் நாட்டின் எல்லையை நோக்கி ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை ஐடிஎஃப் அடையாளம் கண்டுள்ளது,” என்று டெலிகிராமில் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் கூறியது, மேலும், பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்து மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.
போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான்: இஸ்ரேல் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்று ஈரான் மத்தியஸ்தர்களான கத்தார் மற்றும் ஓமனிடம் தெரிவித்துள்ளது,
“இஸ்ரேலின் முன்கூட்டிய தாக்குதல்களுக்கு ஈரான் தனது பதிலடியை முடித்த பின்னரே தீவிர பேச்சுவார்த்தைகளைத் தொடருவோம் என்று கத்தார் மற்றும் ஓமன் மத்தியஸ்தர்களிடம் ஈரான் தரப்பினர் தெரிவித்தனர். நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும்போது பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் எனவும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.” என்று மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கான அதிகாரி ஒருவர் கூறினார்.
இஸ்ரேல் கடும் எதிர்வினை: இஸ்ரேல் மீது ஈரான் ஒரே இரவில் கொடிய தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஈரானின் ஏவுகணை தளங்களை குறிவைத்து இஸ்ரேல் புதிய தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது.