பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 5 மணி வரை தொடர்ந்த கனமழையால் காவிரி, கன்னிகா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குடகில் பெய்துவரும் கனமழையால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 29 ஆயிரத்து 369 கன அடியாக அதிகரித்தது. இதேபோல ஹாரங்கி அணைக்கு 3 ஆயிரத்து 810 கன அடி நீரும், ஹேமாவதி அணைக்கு 5 ஆயிரத்து 445 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல கேரள மாநிலம் வயநாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு வினாடிக்கு 21 ஆயிரத்து 579 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதாக காவிரி நீர்ப்பாசன கழகம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட 4 அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.இதனால் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 875 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.