திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கைகலப்பாக மாறியது. தொடர்ந்து இரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மார்க்சிஸ்ட் – இந்து முன்னணி வாக்குவாதம்: திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ‘மத்திய, மாநில அரசுகள் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சரத்குமார், முருகன் மாநாடு குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த இந்து முன்னணி நிர்வாகி வினோத் மற்றும் அவரது ஆதரவாளர்கள், மார்க்சிஸ்ட் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் இரு தரப்பினருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது.
அப்போது, அங்கு வந்த தாடிக்கொம்பு போலீஸார், இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போகச் செய்தனர். இதனிடையே, மார்க்சிஸ்ட் நிர்வாகி சரத் மற்றும் இந்து முன்னணி நிர்வாகி வினோத் ஆகியோர் காயம் காரணமாக ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டனர்.

சாலை மறியல்: இந்நிலையில், தாடிக்கொம்பு போலீஸார், இந்து முன்னணி அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி மார்க்சிஸ்ட் கட்சியினர் திண்டுக்கல் – பெங்களூரு நான்கு வழிச்சாலை தாடிக்கொம்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
காவல் துறையில் புகார்: திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி சிபின்சாய் சவுந்தர்யன், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்துபோகச் செய்தார். அங்கு வந்த திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் எம்.பி ஆர்.சச்சிதானந்தம் நடந்த நிகழ்வு குறித்து கட்சியினரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும், இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகளும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர்.

மோதல்: பிரச்சினைகள் முடிவடைந்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் நிர்வாகி சரத்குமாரை அவரது கட்சியினரும், இந்து முன்னணி நிர்வாகி வினோத்தை பார்க்க இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகளும் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

வழக்குப் பதிவு: இந்த மோதலில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. போலீஸார் இரு தரப்பினரையும் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றினர். வெளியே வந்த இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது, அவர்களை போலீஸார் விலக்கி விட்டனர். இதையடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு இரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் மீதும் திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.