ரூ.7.42 கோடி மோசடி வழக்கில் மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரியின் கணவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரி ராஷ்மி கரந்திகரின் கணவர் புருஷோத்தம் சவான். இவர் மும்பை, தானே மற்றும் புனே நகரில் அரசு ஒதுக்கீட்டு குடியிருப்புகளை சலுகை விலையில் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் ரூ.24.78 கோடி மோசடி செய்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சூரத் நகரை சேர்ந்த ஒரு தொழிலதிபர் உள்ளிட்ட சிலரிடம் புருஷோத்தம் சவான் ரூ.7.42 கோடி மோசடி செய்ததாக மும்பை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் அவரை மீண்டும் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “அரசு ஒதுக்கீட்டு மனைகளை தள்ளுபடி விலையில் பெற்றுத் தருவதாக கூறி சூரத் தொழிலதிபரிடம் புருஷோத்தம் பணம் வாங்கியுள்ளார். மேலும் மகாராஷ்டிர போலீஸ் அகாடமிக்கு டி-ஷர்ட் விநியோகம் செய்யும் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்துள்ளார்” என்றார்.