தோஹா,
ஈரான் அணு ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி இஸ்ரேல் கடந்த 13-ந் தேதி திடீரென மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த அதிரடிக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த 11 நாட்களாக நடந்து வரும் இந்த மோதல்களால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் இதுவரை சுமார் 950 பேர் உயிரிழந்ததாகவும், 3 ஆயிரத்து 450 பேர் படுகாயம் அடைந்ததாகவும் வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஈரானை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்தது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வரும் நிலையில், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பலன் அளிக்காது எனக்கூறி ஈரான் ஒதுங்கி விட்டது.
இதை தொடர்ந்து அமெரிக்கா ‘மிட்நைட் ஹாமர்’ என்று பெயரில் ஈரான் மீது நேரடியாக தாக்குதல் தொடுத்தது. அந்த நாட்டின் போர்டோ, நட்டான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 இடங்களில் உள்ள அணுசக்தி நிலையங்களை தாக்கியது. அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள், 13 ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட ‘பங்கர் பஸ்டர்’ எனப்படும் பதுங்கு குழி அழிப்பு குண்டுகளை வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் கூறியிருந்தது.
இந்த நிலையில், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. 10 ஏவுகணைகள் வீசப்பட்ட நிலையில், 7 இடைமறிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் 3 ஏவுகணைகள் சரியாக இலக்கை தாக்கியுள்ளன. இதுவரை பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. கத்தாரில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இதைபோல கத்தார் தலைநகர் தோஹாவிலும் குண்டு சப்தம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ தளமாக இது உள்ளது. ஈரான் பதிலடி தாக்குதல் நடத்திய நிலையில், டிரம்ப் இதனை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கத்தாரில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வீட்டிற்க்குள்ளேயே இருக்க இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. கத்தார் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள் என்று தூதரகத்துடன் தொடர்பில் இருங்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக ஈரான் மீது அமெரிக்கா இன்று இரவு தாக்குதல் நடத்த இருப்பதாக வந்த தகவலை அடுத்து தனது வான்பரப்பை மூடியதாக கத்தார் அறிவித்தது. கத்தார் தலைநகர் தோஹா செல்லும் அனைத்து விமானங்களும் திருப்பி அனுப்பப்பட்டன.