சங்கரன்கோவிலில் திமுக நகர்மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே அதிமுக-வுடன் அலையன்ஸ் போட்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அறிவாலயத்தை அதிரவைத்திருக்கிறார்கள்.
30 வார்டுகளை கொண்ட சங்கரன்கோவில் நகராட்சியில் 9 வார்டுகளில் திமுக வென்றது. 12 வார்டுகளை அதிமுக கைப்பற்றியது. இருந்தபோதும் கூட்டணி கட்சிகளின் தயவில் நகராட்சி தலைவர் பதவியை அதிர்ஷ்டக் குலுக்களில் கைப்பற்றியது திமுக. தென்காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணனின் மனைவி உமா மகேஸ்வரி சேர்மனானார். அதிமுக-வைச் சேர்ந்த கண்ணன் (எ) ராஜு வைஸ் சேர்மனானார்.
ஆரம்பம் முதலே சேர்மன் உமா மகேஸ்வரிக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் அவ்வளவாய் ஒத்துப்போகவில்லை. அதிமுக கவுன்சிலர்களுடன் திமுக கவுன்சிலர்கள் சிலரும் சேர்ந்துகொண்டு உமா மகேஸ்வரிக்கு எதிராக கொடிபிடித்தனர். இதனால் கவுன்சில் கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவெற்றவே சிரமப்பட்டார் உமா மகேஸ்வரி. அதேபோல் உமா மகேஸ்வரி, ஆளும் கட்சி கவுன்சிலர்களைக் கூட மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் வெடித்தது. இதனால் 2023 டிசம்பரில் உமா மகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். ஆனால் அப்போது, அமைச்சர்கள் தலையிட்டு தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு வரவிடாமல் தடுத்தார்கள்.
இந்த நிலையில், பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை, கவுன்சில் கூட்டத்தை முறையாக கூட்டவில்லை, நகராட்சியில் தொட்டது அனைத்திலும் ஊழல் நடக்கிறது என்பது உள்ளிட்ட புகார்களைச் சொல்லி திமுக, அதிமுக உள்ளிட்ட 24 கவுன்சிலர்கள் சேர்ந்து மீண்டும் உமா மகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்திருக்கிறார்கள். இதன் மீதான வாக்கெடுப்பு ஜூலை 2-ம் தேதி நடைபெறும் என அறிவித்திருக்கிறார் நகராட்சி ஆணையர்.
இதற்கிடையே, சேர்மன் தரப்பையும் அதிருப்தி திமுக கவுன்சிலர்களையும் திமுக தலைமை அழைத்துப் பேசி இருக்கிறது. இப்போது, இந்தப் பிரச்சினையை சுமுகமாக பேசி முடிக்கும் பொறுப்பை தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏ-வுமான ஈ.ராஜாவிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். ஆனால், ராஜாவே உமா மகேஸ்வரி மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறும் சிலர், “கடந்த முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அனைவரையும் ‘முறையாக’ கவனித்துத்தான் பிரச்சினையை முடித்தார்கள். தற்போதும் அந்த ‘மரியாதையை’ எதிர்பார்த்துத்தான் சிலர் இந்தக் காரியத்தில் இறங்கி இருக்கிறார்கள்” என்று சொல்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய வைஸ் சேர்மன் கண்ணன் என்ற ராஜு, “நகராட்சி கூட்டத்தை மாதா மாதம் நடத்தாமல் 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் நடத்துகிறார்கள். வார்டுகளில் எந்த வேலையும் நடக்காததால் திமுக கவுன்சிலர்களே அதிருப்தியில் உள்ளனர். நகராட்சி நிர்வாகத்தில் சேர்மனின் கணவர் தலையீடு அதிகமாக உள்ளதால் அதிகாரிகளும் அதிருப்தியில் உள்ளனர். முதல் முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது மேலிடத்தின் அழுத்தம் காரணமாக, திமுக கவுன்சிலர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அதனால் கூட்டம் கோரம் இல்லாமல் முடிந்தது. பணத்தால் அனைத்தையும் சரி செய்துவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால், கடந்த முறை தலைமைக்கு கட்டுப்பட்ட திமுக கவுன்சிலர்கள் இம்முறையும் அப்படி கட்டுப்படுவார்களா என்று தெரியவில்லை” என்றார்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கையெழுத்திட்ட திமுக கவுன்சிலர்களில் ஒருவர் கூறும்போது, “அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளில் எல்லா வேலைகளும் நடக்கிறது. ஆனால், திமுக கவுன்சிலர்களின் வார்டுகளில் எந்த வேலையும் நடக்கவில்லை. இந்தப் பிரச்சினையை தலைமையின் கவனத்துக்கு கொண்டு சென்றதால் தலைமை சேர்மனை அழைத்து கண்டித்தது.
அதன் பிறகு அதிமுக கவுன்சிலர்களுக்கு ஆதரவாக சேர்மன் செயல்படவில்லை. அதனால் அதிருப்தியடைந்த அதிமுக கவுன்சிலர்கள் இப்போது எங்களோடு சேர்ந்து சேர்மனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். அடுத்ததாக திமுக மாவட்டச் செயலாளரின் ஆதரவுடன் திமுக-வைச் சேர்ந்த புனிதாவை சேர்மனாக்க வேலைகள் நடக்கிறது. இது தெரியாமல் பிரச்சினையை பேசி முடிக்கும் பொறுப்பை மாவட்டச் செயலாளரிடம் ஒப்படைத்திருக்கிறது திமுக தலைமை. ஆனால் அவர், இதற்காக எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை” என்றார்.
இதுகுறித்து சேர்மன் உமா மகேஸ்வரிக்காக நம்மிடம் பேசிய அவரது கணவர் சரவணன், “திமுக கவுன்சிலர்களிடம் தலைமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. பிரச்சினை சுமுக முடிவுக்கு வரும். நல்ல முடிவு விரைவில் கிடைக்கும்” என்று மட்டும் சொன்னார். மாவட்டச் செயலாளர் ராஜாவோ, “கவுன்சிலர்களிடம் பேசி சமாதானப்படுத்தி உள்ளோம். உமா மகேஸ்வரியே தொடர்ந்து சேர்மனாக செயல்படுவார். நல்ல முடிவு ஏற்படும்” என்றார்.
தேர்தல் நெருங்க நெருங்க அறிவாலயத்துக்கு உடன்பிறப்புகள் இன்னும் என்னவெல்லாம் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப் போகிறார்களோ!