டெல்லி: மேகதாது அணை வழக்கில் தமிழ்நாடு அரசின் முறையீட்டை உச்சநீதிமன்றம் ஏற்றது. காவிரி ஆணையத்தின் அடுத்த கூட்டத்தில் மேகதாது அணையின் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு அந்த விசாரணை நிலுவையில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த விவகாரத்தை காவிரி ஆணையத்தில் விவாதிக்கக்கூடாது என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 3 முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் 17 மற்றும் 23ம் தேதிகளிலும் ஜூலை 6ம் தேதி நடைபெற இருந்த கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் விடுமுறை முடிந்து உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் கூடிய நிலையில்; தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது மேகதாது தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். அடுத்த கூட்டம் கூட இருக்கும் சூழ்நிலையில் அவசரமாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க தடை விதிக்க வேண்டும். இதனை தொடர்ந்து வழக்கை 19ம் தேதி விசாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. வழக்கை விசாரிக்க வேண்டாம் என கர்நாடகா தரப்பு வைத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
