ஓபிஎஸ்-ஐ அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (ஜூலை 15) லேசான கொரோனா அறிகுறிகளுடன் சென்னையிலுள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜூலை 15ஆம் தேதி லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது, மருத்துவ நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பில் இருந்துவருகிறார். நலமுடன் உள்ள அவர் நிபுணர் குழுவின் அறிவுறுத்தலின்படி தற்போது சிகிச்சை எடுத்துவருகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.
image
கடந்த 12ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது ஓபிஎஸ் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஓ.பி.எஸ் பூரண உடல்நலம் பெற வேண்டி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அப்பதிவில் “கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

#COVID19 தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான திரு. @OfficeOfOPS அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) July 16, 2022

அதிமுகவில் தலைமை யுத்தம் உச்சத்தை எட்டிய நிலையில் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்றும் ஓ.பன்னீர்செல்வன் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்றும் மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இதனிடையே, நீதிமன்றத்திலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவாதியாகிவிட்டதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஓ.பி.எஸை “அதிமுக ஒருங்கிணைப்பாளர்” என்று குறிப்பிட்டு பூரண உடல்நலம் பெற வாழ்த்தியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. அத்துடன், திமுகவுடன் ஓபிஎஸ் கூட்டு வைத்து செயல்படுவதாக இபிஎஸ் தரப்பினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.