எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலகட்டத்தில், ரூ.4,800 கோடி மதிப்பில் டெண்டர் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பின்னர் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கடந்த 2018-ம் ஆண்டில் டெண்டர் முறைகேடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி தனது நெருங்கிய உறவினர்களுக்கு டெண்டர்களை வழங்கி முறைகேடு செய்ததாகவும், ஆர்.எஸ்.பாரதி புகார் கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில், டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட்டிருந்தது. பின்னர் எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்கை, சிபிஐ விசாரிக்க வேண்டியதில்லை. மேலும், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும்” என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், `வழக்கின் விசாரணையானது சிபிஐ விசாரணையாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை’ என ஆர்.எஸ்.பாரதி தரப்பு வாதிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று கூறியுள்ளது. உரிய முறையில் விசாரணை நடக்க வேண்டும். யார் விசாரிக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு கவலை இல்லை. உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தான் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் கேட்டோம்” என்றார்.