சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தற்போது, இங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில், 400 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய பேருந்து முனையம் கட்டும் பணி கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திருச்சி, போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இதில், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்கள், மாநகர போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் என அனைத்து பேருந்துகளும் ஒரே இடத்தில் இருந்து இயக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், தமிழக வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த பேருந்து நிலைய கட்டுமானப்பணி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது பணி முழுமை அடைந்துள்ளது. வரும் (2023) ஆண்டு பிப்ரவரியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும்” எனத் தெரிவித்தார்.