
மகளிர் சக்தி விருது பெற, பெண்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வாயிலாக மகளிர் சக்தி விருது வழங்கப்படுகிறது. இதற்கு தகுதி வாய்ந்த, தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மகளிருக்கான சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல், சட்ட உதவி, விழிப்புணர்வு, கல்வி, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் குறிப்பிட்ட பங்களிப்பு, பெண் கொடுமை, வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாகுபாடு, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் தலைசிறந்த பங்களிப்பு சேவைபுரிந்த பெண்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில், மகளிர் சக்தி விருது என்னும் தேசிய விருது வழங்கப்படுகிறது.
இதற்கு தேர்வாகும் தனிப்பட்ட நபர் மற்றும் நிறுவனங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் www.narishaktipuraskar.wcd.gov.on. என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோரால் இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க இறுதி நாள் 20.10.2022 ஆகும். இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களில் அனைத்து தகுதிகள் பெற்ற விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டிய முந்தைய வாரத்தில் புதுடெல்லியில் குடியரசுத் தலைவரால் தேசிய விருது வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.