விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள வி.சித்தாமூர் கிராமத்தில் வசித்து வருபவர் சக்திவேல். இவர் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் பணி செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தாய் வீட்டுக்கு சென்ற சக்திவேல் குடும்ப அட்டையை கேட்டுள்ளார். இதனை தாய் அசோதை (75) தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் நேற்று அதிகாலை மது போதையில் தாய் வீட்டிற்கு சென்று மீண்டும் தகராறு செய்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகறாரில் ஆத்திரமடைந்த சக்திவேல் தாய் அசோதையை தாக்கியதில் அவர் மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். மதுபோதையில் இருந்த சக்திவேல் தாய் இறந்து விட்டதாக எண்ணி வீட்டின் பின்புறத்திலேயே பள்ளம் தோண்டி தாய் அசோதையை உயிருடன் புதைத்துள்ளார்.
மேலும் வீட்டின் அருகிலேயே பித்து பிடித்தது போல அமர்ந்திருக்கிறார். இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் கேட்டபோது சக்திவேல் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார் மது போதையில் இருந்த சக்தி வேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து அங்கு வந்த மருத்துவ குழுவினர் அசோதையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மது போதையில் தாயை உயிரோடு மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.