சென்னை வியாசர்பாடி எஸ்ஏ காலனியை சேர்ந்த பிசிஏ பட்டதாரி மகாவிஷ்ணு (21). இவர் நேற்று இரவு அவரது நண்பர் ராம்குமார் என்பவரின் பிறந்த நாளை முன்னிட்டு ரெட்டேரி 200 அடி சாலையில் உள்ள ஹோட்டல் எஸ்.ஆர்.எம் கிராண்ட் மதுபான கூடத்தில் மது அருந்தி இருக்கின்றனர். உற்சாகத்தில் அளவுக்கு அதிகமாக மகாவிஷ்ணு மது அருந்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் நண்பர்களுடன் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அங்கிருந்து நண்பர்களுடன் வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார்.
இந்நிலையில் காலை நீண்ட நேரம் ஆகியும் மகாவிஷ்ணு எழவில்லை. மேலும் அசைவின்றி அவர் படுத்து கிடந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை எழுப்ப முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால் மகாவிஷ்ணு எழாததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அங்கு மகாவிஷ்ணுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்திருக்கின்றனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில் தகவல் அறிந்து வந்த எம்கேபி நகர் போலீசார் மகாவிஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மகாவிஷ்ணு காலாவதியான உணவை சாப்பிட்டதால் ஏற்பட்ட விஷத்தன்மை காரணமாக உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பனின் பிறந்த நாள் விழாவில் மது விருந்து கலந்து கொண்ட கல்லூரி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.