தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. அடுத்த 18 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நவம்பர் 20-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் நவம்பர் 20 மற்றும் 21-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், அனைத்து மண்டல இணை இயக்குநர், துணை இயக்குநர்களுக்கும் மீன்வளத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது .
இன்று தேதி முதல் 21-ம் தேதி தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை கடலில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.