குழந்தைகள் தற்போது ஆர்எஸ்வி மற்றும் புளூ காய்ச்சலால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதால் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, பொது மருத்துவத்துறை டாக்டர் சவுந்திரவேல் கூறியதாவது: “கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்துள்ள நிலையில் தற்போது டெங்கு மற்றும் ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
குறிப்பாக, ‘ரெஸ்பரேட்டரி சின்செசியல் வைரஸ்’ (ஆர்எஸ்வி) உள்ளிட்ட பல்வேறு வைரஸ்களால் பாதிப்படுவது அதிகரித்துள்ளது. இதுதவிர, தொடர் வைரஸ் தொற்றுக்களால் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதில், ஆர்எஸ்வி பாதிப்பு அதிகம் உள்ளது. மூக்கு ஒழுகுதல், பசியின்மை, இருமல், தும்மல், காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் ஆகும். இது சாதாரண சளி, காய்ச்சல் போல் இருந்தாலும், மூச்சுக்குழாய் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
சுவாசக் குழாய் உலர்ந்து போவதால், தொடர் இருமல் இருக்கும். இதுகுறித்து பயப்படத் தேவையில்லை. முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும். குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருக்கும் போது சுயமருத்துவம் மேற்கொள்ளக்கூடாது. அந்தந்த வயதில் போட வேண்டிய தடுப்பூசிகளை கட்டாயம் போட வேண்டும்.
பள்ளிகளில் குழந்தைகள் அருகருகே அமர்வதால், நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட குழந்தையிடம் இருந்து மற்ற குழந்தைகளுக்கும் பரவுகிறது. எனவே, குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிய, அடிக்கடி கைகளை கழுவ அறிவுறுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.