
கார்த்திக் என்பவர் பெங்களூருவில் மனைவியுடன் வசித்து வருகிறார். இருவரும் தங்களுக்கு தெரிந்தவர்கள் பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு இரவு 12:30 மணி அளவில் சாலையில் நடந்து வீடு திரும்பினர்.
அப்போது அவர்களை போலீஸார் மடக்கி விசாரணை நடத்தினர். அவர்களின் அடையாள அட்டையை கேட்ட போலீஸார், பின்னர் மொபைல் போனை பிடுங்கிவைத்துக்கொண்டு இரவு 11 மணிக்கு பிறகு சாலையில் நடந்து செல்ல அனுமதி கிடையாது என்று கூறினர்.
அப்படி ஒரு விதி இருப்பது குறித்து தங்களுக்கு தெரியாது என்று அந்த தம்பதியினர் கூறினர். ஆனால் போலீஸார், அவர்களிடம் அபராதமாக 3 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று கேட்டுள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தம்பதி தங்களிடம் அவ்வளவு தொகை இல்லை என்று கூறியுள்ளனர். எனினும் அந்த தம்பதியை தொடர்ந்து மிரட்டிய போலீஸார் பின்னர் அவர்களிடமிருந்து 1000 ரூபாயை வாங்கிக்கொண்டு அவர்களை போக அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தை கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். அதற்கு பெங்களூரு துணை காவல் கமிஷனர் அனூப் ஷெட்டி பதில் அளித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட போலீஸாரை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது போன்ற அனுபவம் வேறு யாருக்காவது ஏற்பட்டு இருந்தால் உடனே அது குறித்து தெரிவிக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
newstm.in