தனக்கு நீதி வேணும் என கைக்குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்..!!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள கிழக்கே கலிங்கராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீகண்டன். இவரது மகள் அஞ்சனா (26). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள இவரும் அதே பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகன் முருகன் என்ற பிரபஞ்சன் (32) என்பவரும் காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பிரபஞ்சனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் கடந்த 2019-ம் ஆண்டு காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் நெல்லை மாவட்டத்திற்கு சென்று பதிவு திருமணம் செய்தனர்.

பின்னர் கொல்லங்கோடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். பிரபஞ்சனின் குடும்பத்தினர் இவர்களை ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வந்தனர். இதனையடுத்து அஞ்சனாவை அவரது பெரியம்மா வீட்டில் விட்டு விட்டு பிரபஞ்சன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். வெளிநாட்டில் இருந்த பிரபஞ்சனின் உறவினர்கள் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததாக கேலி செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் அஞ்சனாவுடனான தொடர்பை துண்டித்தார்.

இதற்கிடையே அஞ்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் பிரபஞ்சன் கடந்த 3 ஆண்டுகளாக மனைவி அஞ்சனாவை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் கணவர் குடும்பத்தினருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி அவர் நித்திரவிளை காவல் நிலையம் மற்றும் குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் மனமுடைந்த அஞ்சனா நேற்று தனது உறவினர்கள் உதவியுடன் கணவர் வீட்டிற்கு வந்தார். அப்போது பிரபஞ்சன் வெளிநாட்டில் உள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் அஞ்சனாவை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இதனால் விரக்தியடைந்த அஞ்சனா தனது கைக்குழந்தையுடன் பிரபஞ்சனின் வீட்டின் முன் நேற்று இரவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நித்திரவிளை போலீசார், பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். அப்போதும் பிரபஞ்சனின் தந்தை தனக்கும் தனது மகனுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார். இதனையடுத்து அஞ்சனா தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.