
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. இந்த வாட்ச் குறித்து நேற்று பேசிய அண்ணாமலை, “நான் கையில் கட்டி இருக்கும் வாட்ச் ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான ரபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்டது. மொத்தம் 500 வாட்சுகள் நாட்டில் இருக்கின்றது. நான் அணிந்திருப்பது 149 வது வாட்ச். என் உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் இருக்கும்.”எனக் கூறினார்.
இதனையடுத்து , 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே சொத்து என கூறும் அண்ணாமலை 4 லட்சம் மதிப்புள்ள விலையுள்ள வாட்சை வாங்கியது எப்படி என்றும், வாட்ச் வாங்கிய ரசீதை வெளியிட முடியுமா என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, “திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். நான் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்.
ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம் , எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள்,என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களை போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.
அன்றைய தினம் நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன். நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார். இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.