
தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட கைகலா சத்தியநாராயணா இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86.
கைகலா சத்ய நாராயணாவுக்கு சில மாதங்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று (23-ம் தேதி) காலை உயிரிழந்தார். நாளை மகா பிரஸ்தானத்தில் அவருடைய இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
கமல்ஹாசனின் ‘பஞ்சதந்திரம்’ திரைப்படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கைகலா சத்ய நாராயணா.அதில் இடம்பெற்ற ‘சின்ன கல்லு பெத்த லாபம்’ என்ற வசனம் பிரபலம். ‘பெரியார்’ திரைப்படத்தில் பெரியாரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
)
சத்யநாராயணா தனது 60 ஆண்டுகால வாழ்க்கையில் வில்லன், குணச்சித்திரக் கலைஞர் மற்றும் நகைச்சுவை வேடங்களில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1959-ம் ஆண்டு ‘செப்பை கூத்துரு’ படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். கடைசியாக, 2019-ல் ‘மகரிஷி’ படத்தில் நடித்து இருந்தார்.
1935-ம் ஆண்டு பிறந்த சத்யநாராயணாவின் சொந்த ஊர் கிருஷ்ணா மாவட்டம், குட்லா வல்லேரு மண்டலம், கவுடவரம் கிராமம். அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் மகன்கள் உள்ளனர். தெலுங்கு திரையுலகில் எஸ். வி. ரங்கா ராவுக்கு பிறகு பல்வேறு மாறுபட்ட வேடங்களில் நடித்தவர் கைகாலா சத்யநாராயணா. என்.டி.ஆர் நடித்த ‘யமகோலா’ படத்தில் கைகலா நடித்த யமதர்ம ராஜு கதாபாத்திரம் அவருக்கு மேலும் கவுரவத்தை பெற்றுத் தந்தது.