வியாபாரி படுகொலை: நாளை வரை 144 தடை உத்தரவு..!

கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு புறநகர் சூரத்கல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட காடிபல்லா 4-வது பிளாக்கை சேர்ந்தவர் ஜலீல் (45). இவர், அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு இவர் கடையில் தனியாக இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கடைக்குள் புகுந்து ஜலீலை பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கினர். இதில் வலி தாங்க முடியாத அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததும், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இது குறித்து சூரத்கல் போலீசாருக்கு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜலீல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த கொலை குறித்து போலீசார் விசாரித்தனர். அதில் எதற்காக கொலை நடந்தது என்பது தெரியவில்லை. மத மோதல்களால் கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், மத மோதல் இருக்க வாய்ப்பு இல்லை என்று ஜலீல் குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. அதாவது ஜலீல் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்களிடம் நன்றாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்த கொலையில் பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் கூறுகையில், “ஜலீல் கொலைக்கான காரணம் தெரியவில்லை. இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவரை கொலை செய்துள்ளனர். இந்த கொலை தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்துள்ளது. அதை வைத்து 5 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம். இதற்காக பிரத்யேக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டது முஸ்லீம் நபர் என்பதால் மத மோதல் ஏற்படாதவாறு தடுப்பதற்கு போலீஸ் தரப்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சூரத்கல், பஜ்பே, பணம்பூர், காவூர் ஆகிய 4 போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் வருகிற 27-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறி யாரும் செயல்படக் கூடாது. மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.