ஜார்கண்ட் மாநிலம் சிம்தேகா பகுதியில் வசித்து வந்த ஜெய்ராம் நாயக் (20) என்பவர், அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார்.
இதனை அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள், 18 வயது பூர்த்தியடையாத சிறுமியுடன் ஜெய்ராம் நாயக்குக்கு திருமணம் செய்து வைக்க முயன்றனர். இதற்கிடையே அந்த கிராமத்தை விட்டு ஜெய்ராம் நாயக் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிம்தேகாவில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஜெய்ராம் நாயக் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சிறுமி கர்ப்பமாக இருந்ததால், அவர் பள்ளிக்குச் செல்வதையும் அவரது பெற்றோர் நிறுத்திவிட்டனர். அதனால் அந்த சிறுமி வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அருகில் உள்ள மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டார். அவருக்கு பிரசவத்தின் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. 14 வயது சிறுமி தாயானது குறித்து போலீசாரும், குழந்தைகள் நலக் குழுவும் விசாரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.