மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணியாற்றும் சுமார் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை ரூபாய் 1000 உயர்த்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், அரசு மருத்துவமனைகளில் மாதம் தோறும் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகள் பெறுபவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு, மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலமாக சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் ஒரு கோடி பேர் அடைந்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் சுமார் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூபாய் 1000 உயர்த்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.