
தேமுதிகவில் தற்போது உட்கட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது நிறைவு பெற்றதும் கட்சியின் செயற்குழு – பொதுக்குழு கூட்டம் நடத்தி பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவுசெய்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான். ஏதோ 5 ஆண்டுகள் தமிழகத்தில் கவர்னராக இருப்பதால் அவருக்கு தமிழைப் பற்றி என்ன தெரியும்..?. கவர்னரின் கருத்துக்கு தேமுதிக தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது.

மக்கள் ஐடி எடுப்பதை மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் எடுக்க வேண்டும். ஆதார் மூலம் அனைத்து சலுகைகளும் மக்களிடம் சென்றடைகிறது. இந்த நிலையில் மக்கள் ஐடி தேவையில்லை. முதலில் வெளிமாநிலத்தில் இருந்து எத்தனை பேர் இங்கே வேலை செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி ஐடி எடுத்தால் என்ன ஆவது..?. இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கிறது. அப்போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம். தேமுதிகவில் தற்போது உட்கட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது நிறைவு பெற்றதும் கட்சியின் செயற்குழு – பொதுக்குழு கூட்டம் நடத்தி பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவுசெய்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்” என்று அவர் கூறினார்.