`மனைவி பணத்தில் தொழில் தொடங்கி உச்சம் தொட்ட தொழிலதிபர்கள்’ – ட்விட்டரில் வைரலான பதிவு!

மனைவியின் சம்பாத்தியத்தில் தொழில் தொடங்கி, உச்சம் தொட்ட வெற்றியாளர்களாக வலம்வரும் `இன்ஃபோசிஸ்’ நாராயணமூர்த்தி உள்ளிட்டோர் குறித்த ட்விட்டர் பயனரின் பதிவு வைரலாகி வருகிறது.

கணவன் என்பவர் வேலைக்குச் செல்ல வேண்டும்; மனைவி வீடு மற்றும் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும் என்ற காலமெல்லாம் இன்று மலையேறிவிட்டது. ஆணுக்குச் சமமாக பெண்கள் அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து வரும் 21-ம் நூற்றாண்டில் நாம் வாழ்கிறோம். ஆனாலும் கூட, வீட்டைப் பராமரிக்கவோ அல்லது மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்வதையோ விரும்பாத ஆண்கள் இன்னமும் இருக்கிறார்கள். காரணம், ஒரு பெண் அதிகமாக சம்பாதிப்பது, அல்லது தனியே சம்பாதிப்பவராக இருப்பது என்பது ஆணின் ஈகோவையும் சுயமரியாதையையும் பாதிக்கும் என்று இந்தியச் சமூகங்களில் நிலவும் தவறான கருத்தேயாகும்.

பணம் | தொழிலதிபர்

இந்நிலையில், மனைவியிடம் பெற்ற பணத்தை முதலீடாகக் கொண்டு தொழில் தொடங்கி சாதனை படைத்த தொழிலதிபர்கள் குறித்து, ட்விட்டர் பயனர் ஒருவரின் பதிவும், அதற்கான பதில் கமென்டுகளும் வைரலாகி வருகின்றன. சமூகமோ, தன்னைச் சுற்றியுள்ளவர்களோ என்ன சொல்வார்களோ என்று கருதாமல், தன் மனைவியின் உதவியால் தொழிலில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள் குறித்து, ட்விட்டர் பயனர் ரிச்சா சிங் என்பவர் பதிவிட்டிருந்தார். அத்துடன், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி மற்றும் ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் பவிஷ் அகர்வால் ஆகியோரை, அவர் உதாரணமாகக் குறிப்பிட்டு, அவர்களின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வெற்றிக்கு மனைவியர் அளித்த நிதிப் பங்களிப்பு குறித்தும் பதிவிட்டிருந்தார்.

ரிச்சா சிங்கின் இந்தப் பதிவால் ஈர்க்கப்பட்ட Flatheads காலணி நிறுவனத்தின் இணை நிறுவனர் கணேஷ் பாலகிருஷ்ணன், `எனது குடும்பத்தையும் வருவாயையும் என் மனைவிதான் நிர்வகித்து வருகிறார். என் மனைவி சம்பாதித்து நான் செலவு செய்கிறேன்’ என்று பதிலளித்துள்ளார். பாலகிருஷ்ணனின் பதிவுக்கு பதிலளித்துள்ள ரிச்சா சிங், தனது ட்விட்டர் பதிவில், “மனைவியின் சம்பளத்தில் வாழ்வது எப்படி நம் இந்தியச் சமூகத்தில் இழிவாக பார்க்கப்படுகிறது என்பதை நான் உணர்ந்துள்ளேன். கணேஷ் மட்டுமல்ல, வெற்றிகரமான இரண்டு தொழிலதிபர்கள் தங்கள் மனைவியிடம் இருந்து நிதி உதவி பெற்றுள்ளனர்” என்று கூறி, இன்ஃபோசிஸின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் ஓலா கேப்ஸ் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது பதிவில், `நாராயண மூர்த்தி அவரது முதல் முயற்சியின் தோல்விக்குப் பிறகு, அவரின் மனைவி சுதா மூர்த்தி வழங்கிய சொற்ப மூலதனத்தில் இன்ஃபோசிஸைத் தொடங்கினார். சுதா மூர்த்தி தன் கணவருக்கு 10 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கியதன் மூலம் இன்ஃபோசிஸின் முதல் முதலீட்டாளர் ஆனார். இதேபோல், ஓலா கேப்ஸ் பவிஷ் அகர்வாலுக்கு ஆரம்ப நாள்களில் அவரின் மனைவி ராஜலட்சுமி அகர்வால்தான் நிதியுதவி வழங்கினார். காரை வாங்குவதற்கு அவர்தான் கடன் வழங்கினார்’ என்று ரிச்சா சிங் தனது பதிவில் சுட்டிக் காட்டியுள்ளார்.

“இன்னும் பல ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் தங்கள் மனைவியின் ஆதரவால் வெற்றிபெற முடிந்தது. உங்கள் வாழ்க்கை என்பது நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் நபரைப் பொறுத்தது!” என்று தனது பதிவை முடித்துள்ளார்.

இப்பதிவு ட்விட்டரில் வைரலாகியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள பல பயனர்கள், தொழிலதிபர்களின் வெற்றிக்குப் பின்னால் உள்ள பெண்களைப் பாராட்டியுள்ளதோடு, தங்களுக்கு தத்தம் மனைவியர் அளித்து வரும் பங்களிப்பினையும் குறிப்பிட்டுள்ளனர். மனைவியின் வருவாயில் வெற்றிகரமாக வலம்வரும் தொழிலதிபர்கள் குறித்த இப்பதிவுகள் தற்போது வைரலாகி பலரின் பாராட்டை பெற்று வருகின்றன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.