மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு இன்னும் 2 நாட்களே அவகாசம் உள்ளதால், இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையில் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் உள்ளனர்.
இதையடுத்து, தமிழ்நாடு மின் நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானோர் இணைக்காததால், வரும் ஜனவரி31-ம் தேதி வரை கெடு நீட்டிக்கப்பட்டது.
இதற்காக, மாநிலம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன. இதுவரை 2.25 கோடி பேர் மட்டுமே இணைத்துள்ளனர். இந்த அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என மின்வாரியம் தெரிவித்து உள்ளது. இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாததோடு, அவர்களுக்கு அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.