“எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்!!”

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், பொள்ளாச்சியில் 2019ஆம் ஆண்டு மாணவிகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என குறிப்பிட்டிருந்தார்.

சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் மற்றும் புகார் அளித்த சகோதரரின் பெயர்களை வெளியிட்டதால், மற்ற பெண்கள் புகார் அளிக்க முடியாமல் இன்னலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே அரசாணையில் பெயர்களை இடம்பெறச் செய்தது குறித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும், அப்போதைய தலைமை செயலாளரிடமும் விசாரணை நடத்த வேண்டுமென கடந்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி தமிழக முதல்வரின் முகவரி துறையிடம் மனு அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகார் மனு ஜூலை 22ஆம் தேதி டிஜிபி மற்றும் கோவை எஸ்.பி.க்கு பரிந்துரைக்கப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார். எனவே கடந்த ஆண்டு ஜனவரியில் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.