டிஜிட்டல் உலகில் அனைத்து விதமான நிதி சேவைகளும் இணையம் வாயிலாகவே கிடைப்பதால் பல சௌகரியம் இருந்தாலும், இதில் பல ஆபத்துகளும் உள்ளது என்பது மறுக்க முடியாது. இணைய சேவைகளை நாளுக்கு நாள் மேம்படுவது போல திருடர்களும், மோசடியாளர்களும் மக்களிடம் டிசைன் டிசைனாக கொள்ளையடிக்கும் வழியை கண்டுப்பிடித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மக்களுக்கு அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் பண பரிவர்த்தனைகள் என்பதை மிகவும் எளிதாகி விட்டது. அதேசமயம் அதன் மூலம் நடைபெறும் ஏமாற்று வேலைகளும் அதிகமாகிவிட்டன.
இந்த நிலையில் உங்கள் A/C XXXX0308 வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதனை மீண்டும் செயல்படுத்த இந்த லிங்கை கிளிக் செய்ய என வங்கியில் இருந்து வருவது போல சிலருக்கு மெசேஜ் வருகிறது. இந்த மெசேஜை பார்த்து அதிர்ச்சி அடைய வேண்டாம், இது ஒரு ஏமாற்று முயற்சி, நீங்கள் அந்த லிங்கை கிளிக் செய்தால் உங்கள் கணக்கில் இருந்து பணம் பறிபோகும் எனவும் இது போன்ற மெசேஜ் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.
சமீபத்தில் கூட மும்பையில் ஒரு தனியார் வங்கியை சேர்ந்த 40க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு ஒரு மோசடி கும்பல் KYC, PAN விபரங்கள் அப்டேட் குறித்து ஒரு லிங்க் உடன் மெசேஜ் அனுப்பியுள்ளது. இந்த லிங்க்-ஐ கிளிக் செய்த அனைத்து வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்தும் பணம் களவாடப்பட்டு உள்ளது.வங்கியில் KYC, PAN விபரங்களை அப்டேட் செய்வது மிகவும் முக்கியம் என்பதால், இந்த மோசடி கும்பல் வலையில் 40க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் விழுந்துள்ளனர்.