கர்நாடகாவில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கடை ஒன்றில் தோசை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. 24-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தற்போது வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் பேரணி நடத்தி வருகிறது. இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
காங்கிரஸ் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் அனைத்து தரப்பு மக்களின் வாக்குகளையும் கவர திட்டமிட்டுள்ளது.
எனவே, இடஒதுக்கீடு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தவும், மக்கள்தொகை அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் இடஒதுக்கீட்டை அதிகரிக்கவும் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வாக்கு சேகரிப்பின் போது, உணவுக் கடை ஒன்றில் பிரியங்கா காந்தி தோசை சுட்டார். இந்த சம்பவம், சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
newstm.in