பாரிஸ்: ஆள்கடத்தல் நடப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, 303 இந்தியர்கள் பயணித்த தனியார் விமானம், பிரான்சின் பாரிஸ் அருகே திடீரென தரையிறக்கப்பட்டது. இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து, மத்திய அமெரிக்க நாடான நிகராகுவா சென்ற தனியார் விமானம், ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் நகரில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் உள்ள, 303 இந்தியர்கள் கடத்திச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலை யடுத்து, அந்த விமானம் தரையிறக்கப்பட்டுஉள்ளது.
இவர்கள் நிகராகுவா சென்று அங்கிருந்து, அமெரிக்கா அல்லது வட அமெரிக்க நாடான கனடாவுக்கு சட்டவிரோதமாக செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த, 303 பேரில், 13 பேர் சிறுவர்கள். இவர்கள் பெற்றோர் துணையில்லாமல் தனியாக வந்துள்ளது, சந்தேகத்தை ஏற்படுத்திஉள்ளது.
இதனால், இவர்கள் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தற்போது பாரிஸ் அருகே உள்ள வாட்ரி விமான நிலையத்தில் இந்த தனியார் விமானம் நிறுத்தப்பட்டு உள்ளது. அதில் பயணித்த அனைவரும் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம், பாரிஸ் போலீசார் விசாரித்து வருகின்றனர். பாரிசில் உள்ள நம் தூதரக அதிகாரிகளும், அனுமதி பெற்று, அவர்களை சந்தித்து பேசிஉள்ளனர்.
பிரிட்டன் சட்டத்தின்படி, இதுபோன்று நிறுத்தப்படும் வெளிநாட்டவரை, நான்கு நாட்கள் வரை மட்டுமே போலீஸார் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.
அதன்பின், உரிய அனுமதி பெற்றால் மட்டுமே, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
விசாரணை முதல்கட்டத்தில் உள்ளதால், இந்த, 303 பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுக்குப் பின், அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என, தெரிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்