தமாகா தலைவராகி இருப்பார் விஜயகாந்த்: நெருங்கிய நண்பர் எம்.ராஜாராமன் தகவல்

சென்னை: நடிகர் விஜயகாந்தின் ஆரம்பகால நண்பர் எம்.ஆர். என்கிற எம்.ராஜாராமன். மீனா தமிழில் ஹீரோயினாக அறிமுகமான ‘ஒரு புதிய கதை’, ‘கிழக்கு வீதி’, விஜய் நடித்த ‘வசந்த வாசல்’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்திருக்கும் ராஜாராமன்தான், விஜயகாந்தை காங்கிரஸ் தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனாரிடம் அறிமுகப்படுத்தியவர்.

விஜயகாந்துடன் அவருக்குள்ள நட்பு குறித்து அவர் கூறியதாவது: நான் நாளிதழ் ஒன்றில்செய்தியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது விஜயகாந்திடம் செய்தியாளராகத்தான் பழகினேன். பிறகு எங்களுக்குள் ஆழமான நட்பு உருவானது.

தினமும் அவரை சந்திக்கும் வாய்ப்பு வந்தது. இப்ராஹிம் ராவுத்தர், புகழேந்தி, ஐயப்பன், ஜெகதீஷ், அயூப்கான், ரஹ்மத்துல்லா என்று பெரிய நண்பர் வட்டம் விஜயகாந்துக்கு உண்டு. அவரது ரசிகர் மன்றங்களை நான் கவனித்துக் கொண்டேன்.

ஏராளமானோருக்கு அவர் கல்வி உதவித்தொகை வழங்கிஉள்ளார். அவற்றை கல்லூரிகள், பள்ளிகளில் நானே சென்று கட்டியிருக்கிறேன். பிறகு நான் தயாரிப்பாளராக மாறினேன். எனக்கு 3 முறை கால்ஷீட் கொடுத்தார் விஜயகாந்த். ஆனால், என்னால் அவரை வைத்துப் படம் தயாரிக்க முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் நல்ல நண்பர்களாகத் தொடர்ந்தோம்.

நான் தயாரித்த படங்கள் அனைத்தையும் தொடங்கி வைத்தது விஜயகாந்தும், காங்கிரஸ் தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனாரும்தான். அவரும் எனக்கு நல்ல நண்பர் என்பதால், நான்தான் விஜயகாந்தை,மூப்பனாரிடம் அறிமுகப்படுத்தினேன். விஜயகாந்தின் தந்தை காங்கிரஸ்காரர் என்பதால், இருவரும் நெருங்கிப் பழகினர். அவர்களின் சந்திப்புக்குப் பின்னால் இருக்கும் உண்மை யாருக்கும் தெரியாது.

ஜி.கே.மூப்பனார், தமாகாவை தலைமை ஏற்று நடத்துமாறு விஜயகாந்திடம் கூறினார். அவருக்கும் அதில் சம்மதம்தான். இடையில் வேறொரு பெரிய நடிகர் வந்ததால், அது நடக்கவில்லை. அதுநடந்திருந்தால் தேமுதிக உருவாகி இருக்காது. இவ்வாறு எம்.ராஜாராமன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.